புதன், 3 ஆகஸ்ட், 2011

muslim பாகப்பிரிவினை சட்டம்

muslim  பாகப்பிரிவினை சட்டம்

பாகப்பிரிவினைச் சட்டம் ஓர் ஒப்புநோக்கு
இங்கிலாந்து நாட்டில் கி.பி.1871ம் ஆண்டில் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. அங்கே 1938-ம் ஆண்டு வரை ஒருவர் உயில் மூலமாக தன் சொத்துகள் முழுவதையும் எவருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம் என்ற அனுமதி இருந்தது. பின்னர் தான் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வேண்டிய ஏற்பாடு செய்த பிறகே உயில் எழுதலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

1991-ம் ஆண்டில் ஆண், பெண் வேறுபாடு இல்லாது பெண்களுக்குச் சமஉரிமையும் சொத்தில் பங்கும் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் வந்தது. 

இஸ்லாத்திற்கு முன் அரபுகளிடையே நிலைமை வேறுவிதமாக இருந்தது. ஒருவர் இறந்து போனால், அவருடைய வாரிசுகளாகக் குடும்ப அங்கத்தினர்களோ, உறவினர்களோ ஆக முடியாது. போர்க்களங்களில் அவருடன் பங்கு பெறுபவர்களே அவருடைய வாரிசுகளாகக் கருதப்பட்டு வந்தனர். பெண்களும், சிறுவர்களும் ஆயுதம் ஏந்தி போர்க்களம் செல்ல முடியாது என்பதால் அவர்கள் தகுதி இல்லாதவர்களாக கருதப்பட்டனர்.

இமாம் ஸயீத் பின் ஜூபைர் மற்றும் கதாதா (ரஹ்) அறிவித்துள்ளார்கள். அன்று இணை வைப்போர் வயது வந்த ஆண்களுக்கு மட்டுமே சொத்தில் பங்கு கொடுத்து வந்தனர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒன்றும் தருவதில்லை. இந்நிலையில் தான் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(மரணமடைந்த) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்கு உண்டு. மேலும், தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அச்சொத்துக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே, இது அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்ட பங்காகும். (4:7)

நபித் தோழர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஸஅத்பின் ரபீஉ என்ற நபித் தோழருடைய துணைவியார், ஸஅத் மூலம் தமக்குப் பிறந்த இரு பெண்மக்களை அழைத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். 'அல்லாஹ்வின் தூதரே, இவ்விரு பெண் குழந்தைகளும் ஸஅதின் மக்கள். அவரோ உஹூதுப் போரில் தங்களுடன் கொல்லப்பட்டு விட்டார். இவர்களுக்கென எதையும் வைக்க வில்லை. இவர்களை (வளர்த்து) திருமணம் செய்து கொடுக்க வேண்டுமானால் பணமில்லாமல் முடியாது' என்று தெரிவித்தார். அதற்கு நபியவர்கள் இது தொடர்பாக அல்லாஹ் (நல்லதொரு) தீர்ப்பை வழங்குவான்' என்று கூறினார்கள். பின்னர் பாகப்பிரிவினை வசனம் இறங்கியது. உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஅதின் சகோதரருக்கு ஆளனுப்பி அழைத்து வரச் செய்தார்கள். வந்த அவரிடம் ஸஅதின் இரு பெண் மக்களுக்கும் மொத்த சொத்தில் மூன்றில் இரு பாகங்களும், இவர்களின் தாய்க்கு எட்டில் ஒரு பாகமும் கொடுத்துவிட்டு, மீதியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார்கள். (திர்மதி, அஹ்மது, அபூதாவூது, இப்னுமாஜா) 

ஆக, ஒரு முஸ்லிம், தான் உயிருடன் இருக்கும் போது சுயமாகப் பொருளீட்டிச் சேர்த்த சொத்துக்களையும், தந்தை மூலம் கிடைத்த சொத்துக்களையும் தன் விருப்பம் போல் (அனுமதிக்கப்பட்ட வழிகளில் அனுபவிக்கலாம்; அடைமானம் வைக்கலாம்; விற்கலாம் அன்பளிக்கலாம்; முழுச்சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தில் மிகாமல் வாரிசுகள் அல்லாத எவருக்கும் வசிய்யத் (உயில்) செய்யலாம். அவர் இறக்கும் பொழுது விட்டுச் செல்லும் சொத்துக்களை, அல்லாஹ் அறிவித்துள்ள பாகப்பிரிவினைச் சட்டப்படி பிரித்து வழங்கிடல் வேண்டும். இது அவருடைய மூதாதையர் சொத்து, சுயமாகச் சேர்த்த சொத்து, கூட்டுக் குடும்பச் சொத்து, அசையும் சொத்து, அசையாச் சொத்து ஆகிய அனைத்து வகைச் சொத்துக்களுக்கும் பொருந்தும். இதில் வேற்றுமையயல்லாம் முஸ்லிம் சட்டத்தில் இல்லை. இதேபோல வாரிசு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அனைவருக்கும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விழுக்காடுப்படி பங்களித்தல் வேண்டும்.

விதிமுறைகள்
இறந்துவிட்ட ஒரு முஸ்லிமின் சொத்துக்களை வாரிசுகள் பாகப்பிரிவினை செய்து கொள்ள வேண்டுமானால், அதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறை விதிகள் உண்டு. இறந்து போனவரின் அடக்கச் செலவுகளையும், அவர் மீதுள்ள கடன்களையும், மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் அவர் செய்து விட்டுச் சென்ற மரணசாசனத்தையும் நிறைவேற்றிய பிறகே, மீதியுள்ள சொத்துக்களைப் பாகப்பிரிவினை செய்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய மரபுரிமைச் சட்டத்தில் இரண்டு தலைப்புகள் காணப்படும். முதலாவது கணவன் அல்லது மனைவியும், பெண்களும், உறவு வழியினரும் சொத்துரிமை பெற அங்கீகாரம் பெறுகிறார்கள். இரண்டாவது பெற்றோரும் ஏறுமுறை மூதாதையரும், ஆண்களின் வழித் தோன்றல்களும் சொத்துரிமை பெற தகுதி பெறுவார்கள். ஆக, ஆண்களைப் போலவே பெண்களும் சொத்துரிமை பெற உலகத்திலேயே முதன் முதலாக வழிவகுத்த மார்க்கம் இஸ்லாம் தான் என்ற பேருண்மை வரலாற்றில் பதிவாகியுள்ளது.

முஸ்லிம் பாகப்பிரிவினைச் சட்டத்தில் ஆண்களுக்கு வழங்கப்படும் பங்கில் பாதி பெண்களுக்கு வழங்கப்படும். இதற்குக் காரணம், பிறந்த வீட்டில் பெற்றோர் பராமரிப்பிலும், புகுந்த வீட்டில் கணவனின் பராமரிப்பிலும் வாழும் பெண்ணுக்குப் பொருளாதாரத் தேவைகளும் பொறுப்புகளும் மிகக் குறைவு. ஆனால், ஆண்களோ குடும்ப நிர்வாகத்தை முழுவதுமாக ஏற்க வேண்டியவர்களாக உள்ளனர். ஆண்களின் பொருளாதாரத் தேவையை முன்னிட்டு இரு பெண்களின் பங்கு ஓர் ஆணுக்கு என நிர்ணயித்திருப்பது மிகவும் பொருத்தமேயாகும்.

இன்றைய இந்தியாவில் பெண்களின் உரிமைப் போராட்டம் காரணமாக இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் மாற்றம் செய்து, பெண்களுக்குச் சமபங்கு அளித்திருக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் இந்த மாற்றம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றே கூற வேண்டும். இச்சட்டத்தினால் குழப்பமே எஞ்சுகிறது.

எடுத்துக்காட்டாக, இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் திருத்தப்பட்ட ரத்துப்படி, மகனுக்கும் மகளுக்கும் சம பங்கு தர வேண்டும். ஆனால், ஒரு பெண் தாய், சகோதரி, மனைவி, பேத்தி, பாட்டி என்ற உறவுகளில் இறந்தவருக்கு இருந்தால் அவர்களுக்கு எத்தனை பங்கு அளிக்க வேண்டும் என்பதற்கு எந்தக்குறிப்பும் காணப்படவில்லை. அதே நேரத்தில் இஸ்லாமியப் பாகப்பிரிவினைச் சட்டத்தில் இவற்றுக்கெல்லாம் துல்லியமான கணக்கு உண்டு என்பதை மறந்து விடக் கூடாது.

முஸ்லிம் சட்டம் என்பது இறைவனால் அருளப்பெற்ற விதிகளைக் கொண்டதாகும். எல்லாம் அறிந்த இறைவன் ஒரு சட்டத்தைத் தருகிறான் என்றால், அதில் நிச்சயம் நமக்கு நன்மையே இருக்கும். தகுந்த காரணமும் இருக்கவே செய்யும். மனித மூளைக்குச் சில விஷயங்கள் எட்டவில்லை என்பதற்காக இறைச்சட்டங்களை நிராகரித்தல் கூடாது. இறைச்சட்டத்தை மாற்றவோ, திருத்தவோ,சேர்க்கவோ, குறைக்கவோ மனிதனுக்கு அதிகாரம் கிடையாது.

இஸ்லாமியச் சட்டங்களிலேயே அதன் பாகப்பிரிவினைச் சட்டம் தான் மிகவும் முக்கியமானதும், நுணுக்கமானதும் ஆகும். முஸ்லிம்களிலேயே பலருக்கு இச்சட்டம் தெரிவதில்லை.

இஸ்லாத்தின் பாகப்பிரிவினைச் சட்டம் தெரியாததால் முஸ்லிம்களில் சிலர் இந்துச் சட்டத்தில் உள்ளது போல் பாட்டனார் சொத்தில் பேரர்களுக்கும் பங்குண்டு என தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். மூதாதையர் சொத்து, தானே தேடிய சொத்து, கூட்டுக் குடும்பச் சொத்து, அசையும் சொத்து, அசையா சொத்து போன்ற பாகுபாடெல்லாம் முஸ்லிம் சட்டத்தில் இல்லை. எடுத்துக்காட்டாக, ஒரு முஸ்லிம் சுயமாக சம்பாதித்த சொத்துக்களையும், பெற்றோர் மூலமோ மற்றோர் அளித்த அன்பளிப்பு மூலமோ பெற்ற சொத்துக்களையும் தன் பெயரில் வைத்து அனுபவித்து வந்தால், அவர் இறந்த பிறகு அந்தச் சொத்துக்கள் எல்லாம் அவருடைய முறையான வாரிசுகளுக்கு கிடைக்கும். இதில் பேரக் குழந்தைகள் விசே உரிமை கொண்டாட முடியாது.

மகனும் பேரனும்
ஒரு தந்தைக்கு மூன்று புதல்வர்கள் என்று வைத்துக் கொள்வோம். தந்தை உயிரோடு இருக்கும் போதே திருமணமாகி குழந்தைகளையும் பெற்றுக் கொண்ட மூன்று மகன்களில் ஒருவர் இறந்து விட்டார். பிறகு தந்தை இறந்தார். இப்படி மகன் இறந்த பிறகு தந்தை இறந்தால் உயிருடன் இருக்கும் இரு புதல்வர்களுக்குத் தான் சொத்தில் பங்கு கிடைக்காது. ஒரு முஸ்லிம் உயிர் வாழும் போது, உயிருடன் இருக்கும் மகன்கள் தாம் தந்தையைக் கவனித்துப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். எனவே, தந்தைக்குப் பிறகு அவர்களே வாரிசுகளாவர்.

ஒரு முஸ்லிம் தந்தைக்கு ஆண் குழந்தை இல்லாமல் பெண் மக்கள் மட்டுமே இருந்தால், தந்தை இறந்த பிறகு பெண் மக்களுக்கு மட்டும் சொத்து கிடைக்காமல் இறந்தவரின் மற்ற உறவினர்களுக்கும் சொத்தில் பங்குதாரர்களும் அல்லாமல், எச்சதாரர்களும் அல்லாமல் இரத்த உறவில் வருபவர்களே (தவுல் அர்ஹாம்) தூரத்து உறவினர்கள் பங்கு கேட்க உரிமை பெறுகிறார்கள் பங்குதாரரோடு ஒரேயயாரு நிலையில் மட்டும்தான் எச்சதாரர் மரபுவழியில் வாரிசாவார். அதாவது கணவன் அல்லது மனைவி பங்குதாரராக இருக்கும் போது தான் இந்நிலை ஏற்படுகிறது.

உதாரணமாக, ஒருவர் மனைவியையும், தூரத்து உறவுக்காரர் ஒருவரையும்ட விட்டுச் சென்றால், பங்குதாரர் என்ற முறையில் கால் பங்கு மனைவிக்கு கிடைக்கும். இதே போல், ஒரு பெண் கணவனையும் தூரத்து உறவுக்காரர் ஒருவரையும் விட்டு இறந்தால் பங்குதாரர் என்ற முறையில் கணவனுக்கு அரைப்பங்கும், மீதிபங்கு தூரத்து உறவினருக்கும் கிடைக்கும்.
தந்தையுடன் பிறந்த சகோதரர்களின் மக்களும் பேரக்குழந்தைகளும் ஒரே நேரத்தில் சொத்துரிமை பெற முடியாது. தூரத்து வாரிசுகளைவிட நெருங்கிய உறவினர்களே சொத்துரிமை பெற முடியும். தந்தையும், தந்தையின் தந்தையும் பங்குதாரர்கள் வரிசையில் வந்தாலும் தந்தை இல்லாதபோதே பாட்டனுக்குப் பங்கு கிடைக்கும். மகன், பேரன் எச்சதாரர்கள் தாம் என்னும் மகனுக்கே பங்கு கிடைக்கும் என்பது சட்டம். இது பிடிக்காத பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போதே பெண் மக்களுக்கு அன்பளிப்பாக முழு சொத்துகளையும் எழுதி வைத்து விடுகிறார்கள். அப்படி எழுதி வைத்தால் அது செல்லும் என்றாலும், இது முறையாகாது.

இதேபோல, ஒருவர் இறக்கும் போது குழந்தைகள் இல்லாத நிலையில் மனைவியும், சகோதரியும் இருந்தால், அவரது சொத்தில் மனைவியை விட சகோதரியே அதிகமான பங்கு பெறுவார்கள். அதனால், உயிரோடு இருக்கும் போதே மனைவிக்கு அன்பளிப்பாக முழு சொத்தையும் எழுதி வைத்து விடுகிறார்கள். இப்படி அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டால் அது செல்லும் என்றாலும் கூட, முறையாகாது. இறப்பவர்தன் சொத்துக்களை அப்படியே விட்டுச் செல்வதும், இருப்பவர்கள் அதை இறைச்சட்டப்படி பிரித்துக் கொள்வதும் தான் மார்க்கம் விரும்புகின்ற முறையாகும்.

பெண் வாரிசுகள்
ஒருவர் இறந்த பின் மனைவி, தாய், ஒரு மகள் ஆகியோர் இருந்தால் சொத்தை 32 பங்குகளாகப் பங்கிட்டு, அதில் 4 பங்கை மனைவிக்கும், 7 பங்கை தாயாருக்கும், 21 பங்கை மகளுக்கும் கொடுக்க வேண்டும். ஆண் குழந்தை இல்லாமல் மகள் ஒருத்தி இருந்தால் அவளுக்கு சொத்தில் அரைப்பங்கு கிடைக்கும். இரண்டு, அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் இருந்தால் மொத்த சொத்தில் மூன்றில் இரு பங்கு கிடைக்கும்.

மக்கள் இல்லாத போது மனைவி இறந்த கணவன் உயிருடன் இருந்தால், மனைவியின் சொத்தில் இருந்து கணவனுக்கு அரைப்பங்கு கிடைக்கும். இதே நிலையில் கணவன் இறந்து மனைவி இருந்தால், கணவன் சொத்தில் மனைவிக்கு கால்பங்கு கிடைக்கும். இறந்த பெண்ணுக்கு கணவனும், மகளின் மகனும் மட்டும் இருந்தால் இருவருக்கும் தலா அரைப்பங்கு கிடைக்கும்.

மூவகை வாரிசுகள்

பங்குதாரர்கள், எச்சதாரர்கள், தூரத்து உறவினர்கள் என வாரிசுகள் மூவகைப்படுவர். திருக்குர்ஆனில் முதல் வகையினரான பங்குதாரர்களைப் பற்றி (அஸ்ஹாபுல் ஃபராயின்) விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் 12 வகையினரும், அவர்களுக்குரிய பங்கு அளவுகள் 6 வகைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. 1. தந்தை, 2. பாட்டன், 3. கணவன், 4. தாய் வழிச் சகோதரன், 5. மனைவி, 6. தாய், 7. பாட்டி, 8. மகள், 9. மகனின் மகள்(பேத்தி), 10. தாய் வழி சகோதரி, 11. தந்தை வழிச் சகோதரி, 12. உடன் பிறந்த சகோதரி ஆக ஆண்களில் நால்வரும், பெண்களில் எண்மரும் பங்குதாரர்கள் ஆவர். வாரிசுகளில் இவர்களுக்குரிய பங்கை கொடுத்தது போக மிச்சம் இருந்தால் தான் எச்சதாரர்களுக்கு சொத்து கிடைக்கும்.

பங்குதாரர்களுக்குக் கொடுத்தது போக மீதியுள்ள சொத்தைப் பெறுபவர்கள் அஸபா என அழைக்கப்படுகின்றனர். இந்த எச்சதாரர்கள் நான்கு வகையினர் ஆவர். மகன் முதலிடம் பெறுகிறான். அடுத்து தந்தையின் தந்தை (பாட்டன் மூன்றாவது தந்தையின் சகோதரன். நான்காவது தந்தையின் தந்தையுடைய (பாட்டனுடைய) சகோதரன்.

முஸ்லிம் பாகப்பிரிவினைச் சட்டத்தில் கூட்டுக் குடும்பச் சொத்து என்ற அமைப்பு கிடையாது. ஆதலால், சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து செய்யும் வணிகத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. இப்படி புணூயூ 1977 சென்னை - 157 என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதே போல முஸ்லிம் சட்டத்தில் பிரதிநிதித்துவம் (யூeஸ்ரீreவிeஐமிழிமிஷ்லிஐ) அங்கீகரிக்கப்படவில்லை. எனவே ஏற்கனவே உள்ள குடும்பச் சொத்துகளுடன் புதிதாக சொத்து வாங்கிச் சேர்த்தால், அது குடும்பத்திலுள்ள, அனைவருக்கும் பொதுவானது என்று கூறி, பாகப்பிரிவினைச் சட்டப்படி பங்கு கோர முடியாது. ஆக, கூட்டுக் குடும்பச் சொத்துக் கொள்கை இஸ்லாமியச் சட்டத்தில் இல்லை.

முறைகேடாகப் பிறந்த சட்ட விரோதக் குழந்தை, தன்னைப் பெற்றெடுத்தளிடமிருந்தோ, இவர்களின் உறவினர்களிடமிருந்தோ வாரிசுரிமை பெற முடியாது. சொத்துரிமை என்பதெல்லாம் சட்டப்படியான வாரிசுகளுக்கு மட்டுமே என்பதுதான் இஸ்லாமியச் சட்டமாகும்.

முஸ்லிமாக இருந்து மதம் மாறுவதால் சொத்துரிமை கிடைப்பதில் பாதிப்பு உண்டா என்பதில் சட்ட வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவன் முஸ்லிமாக இருந்த போது சம்பாதித்த சொத்துக்கள் அவன் மதம் மாறிய பிறகும் அவனுடைய முஸ்லிம் வாரிசுகளுக்கே பங்கிடப்படும். அவன் மதம் மாறிய பிறகு சம்பாதித்த சொத்துகள் பொது கருவூலத்தில் சேர்க்கப்படும். இது இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளுக்குரிய சட்டமாகும்.

இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் இது வியத்தில் தெரிவித்துள்ள கருத்தாவது : ஒரு முஸ்லிம் மதம் மாறிவிட்டால், அவன் முஸ்லிமாக இருந்த போது சம்பாதித்த சொத்துகளானாலும், மதம் மாறிய பிறகு தேடிய சொத்துகளானாலும் எல்லாமே அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும். ஆனால் 1982 பட்னா 226 என்ற வழக்கில் மதமாற்றத்தால் கணவனின் சொத்தில் உரிமை பெறுவதை மனைவி இழக்க மாட்டாள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மனைவியின் பங்கு
ஒரு முஸ்லிம் இறந்த பிறகு, அவனுக்கு குழந்தை இல்லாமல் மனைவி மட்டும் இருக்கிறாள் என்றால், அவனது சொத்திலிருந்து கால் பங்கு மனைவிக்குக் கிடைக்கும். அது எத்தகைய சொத்தாக இருந்தாலும் சரியே - இதுதான் இஸ்லாமியச் சட்டம். ஆனால் நம் நாட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வேறு விதமாக இருக்கிறது. குழந்தை இல்லாத ஒரு முஸ்லிம் விதவை தன்னுடைய கணவனின் அசையா சொத்தான நிலங்களிலிருந்து பங்கு பெற முடியாது. ஆனால், அந்த நிலங்களில் உள்ள மரங்கள், கட்டடங்கள், கணவனுக்கு வரவேண்டிய கடன் தொகைகள், அனுபவிக்க உரிமையுள்ள அடைமானச் சொத்துகள் ஆகியவற்றின் மதிப்பில் நான்கில் ஒரு பங்கு மனைவிக்கு கிடைக்கும். இது பல்வேறு முஸ்லிம் வழக்குகளில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பாகும்.

கடந்த 08.04.1998ல் உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு இங்கு கவனத்திற்குரியது. அதற்கு முன் சென்னை உயர்நீதிமன்றம், ஓர் இந்து விதவை வாரிசுகள் இல்லாத தன் மாமியாரின் சொத்தில் உரிமை கோர முடியாது என்று தீர்ப்பளித்திருந்தது. இதை ரத்துச்செய்த உச்சநீதிமன்றம் இந்து விதவை, குழந்தை இல்லாத தன் மாமியார் இறந்த பிறகு அவரது சொத்தில் உரிமை கோரமுடியும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், இஸ்லாமியச் சட்டப்படி மாமியாரின் சொத்தில் மருமகள் உரிமை கோரமுடியாது. அதே நேரத்தில், மாமியாரின் சொத்து அவருடைய பையனுக்கு கிடைத்து, அவனும் இறந்து விட்டால், கணவன் என்ற முறையில் அவனது சொத்தில் மனைவிக்கு முறைப்படி பங்கு உண்டு.

முஸ்லிம் குடும்பங்கள் தம் குடும்பச் சொத்துகளை முறைப்படி பாகப்பிரிவினை செய்து கொள்வதில் கால தாமதம் செய்யக் கூடாது. உரிய காலத்தில் பாகப்பிரிவினை செய்து கொள்ளத் தவறுவதால் பிற்காலத்தில் பிரிக்கும் போது பல பிரச்சினைகள் தோன்ற வாய்ப்பு உண்டு. ஆனால், சில முஸ்லிம் குடும்பங்களில் கெளரவம் பாதிக்கும் என்று சொல்லி, நீதிமன்றத்திற்கும் செல்லாமல் ஜமாஅத் பஞ்சாயத்திடமும் செல்லாமல், தாமாக சுமூகமாகப் பிரித்துக் கொள்வோம் என்றும் இல்லாமல் பல தலைமுறை வரை பாகப்பிரிவினை செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனால் குடும்பத்தில் குழப்பம், உறவில் விரிசல் ஏற்படுவதுடன், பின்னால் ஒரு சமயத்தில் பாகப்பிரிவினை செய்து கொள்ளும் போது நீண்ட காலமாகிவிட்டதால் சிலருக்குப் பாதிப்பும், சிலருக்கு அதிக லாபமும் கிடைக்க ஏதுவாகிறது. இதனால் பாகப்பிரிவினைச் சட்டத்தின் நோக்கமே வீணாகிவிடுகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு முஸ்லிம் இறந்து போனார். அவருக்கு மனைவி, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். உடனடியாக அவரது சொத்துகளைப் பிரித்துக் கொண்டால்,மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும், மீதியுள்ள சொத்தை மகன்கள் மற்றும் மகள்களிடையே ஆணுக்கு இரண்டு, பெண்ணுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுக்க வேண்டும். ஆனால், உடனடியாகப் பாகப்பிரிவினை செய்து கொள்ளாமல் தாமதப்படுத்திடவே,புதல்விகளில் ஒருவர் இறந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். பிறகு புதல்வர்களில் ஒருவரும் இறந்து விடுகிறார். இரண்டு தலைமுறைகளில் பாகப்பிரிவினை செய்து கொள்ளாமல், மூன்றாவது தலைமுறையில் பாகப்பிரிவினை நடந்தால் என்ன விளைவு ஏற்படும் என்று பாருங்கள்.

முதலாவது தலைமுறையில் உள்ள மனைவிக்கு எட்டில் ஒரு பாகம் ஆரம்பத்தில் கிடைத்ததோடல்லாமல் இடையில் இறந்து போன மகளின் சொத்திலிருந்து ஆறில் ஒரு பங்கும் அதன் பிறகு இறந்து போன மகனின் சொத்திலிருந்து ஆறில் ஒரு பங்கும் அதன் பிறகு இறந்து போன மகனின் சொத்திலிருந்து ஆறில் ஒரு பங்கும் சேர்ந்து கிடைக்கும். ஆக மூன்று வழிகளில் முதலாவது தலைமுறையில் உள்ள மனைவி பங்கு பெறும் நிலை உருவாகும். இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க காலா காலத்தில் பாகப்பிரிவினை செய்து கொள்வதே நல்லதாகும்.

கருவில் உள்ள குழந்தைக்கு பாகப்பிரிவினையில் பங்கு உண்டா? குழந்தையின் தந்தை இறந்த ஆறு மாதத்திற்குள் அல்லது ஒன்பது மாதத்திற்குள் குழந்தை பிறந்து இந்தக் காலக் கெடுவிற்குள் மனைவி மறுமணமும் செய்து கொள்ளாமலிருந்தால் தந்தையின் சொத்தில் அந்தக் குழந்தைக்கு பங்கு உண்டு. மறுமணம் செய்திருந்தால் இரண்டாவது கணவன் மூலம் அக்குழந்தை பிறந்திருக்க இடமுண்டு என்பதால் இறந்து போனவனின் சொத்தில் அக்குழந்தைக்கு பங்கு கிடைக்காது. இதே போல இறப்பதற்கு முன்பே அவன் இது என் குழந்தை அல்ல எனறு சொல்லியிருந்தாலும் பங்கு கிடைக்காது. ஆனால் அந்தத் தாயின் சொத்தில் குழந்தைக்கு பங்கு கிடைக்கும்.

கருவிலிருக்கும் குழந்தை ஒன்றா பலதா என்று முடிவு செய்து கஷ்டம் என்பதால் உயர்ந்த பட்சமாக நான்கு ஆண் அல்லது பெண் குழந்தைகள் என மதிப்பிட்டு இவற்றில் எதன் பங்கு அதிகமோ அந்தப் பங்கை நிறுத்தி வைத்துக் கொண்டுதான் மற்ற வாரிசுகள் சொத்தைப் பங்கிடுவது என்றால் பங்கிட வேண்டும் என்று இமாம் அபூஹனீனபா (ரஹ்) அவர்கள் ஒரு குழந்தை என்றும் மதிப்பிட வேண்டும் என்கின்றார்கள். கடைசியாகக் குறிப்பிட்ட கருத்தே தீர்ப்பாக வழங்கப்படுகிறது.

கருவிலிருக்கும் குழந்தை இறந்தே பிறந்தால் அதற்குப் பங்கு கிடைக்காது. பிறந்த பிறகு இறந்தால் அக்குழந்தையின் பங்கை அதன் வாரிசுகளுக்கு வழங்கிடல் வேண்டும். பங்குதாரரில் ஒருவர் காணாமல் போய்விட்டால் அவருக்குச் சேர வேண்டிய பங்கை என்ன செய்வது ? இது தொடர்பாக ஹனபி மத்ஹபுச் சட்டம் குறிப்பிடும் போது 90 வருடங்கள் வரை அவன் உயிருடன் இருப்பதாகவே கருத வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் மஜ்ஹர் அலி ஸவி. புத்சிங் (1884) என்கிற வழக்கில் ஏழு வருடங்களுக்குள் அவர் வராவிட்டால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று வாதிடுகின்றவருடையது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஏழு வருடங்களுக்குள் அவர் வரவில்லையானால் மற்ற வாரிசுகளுக்கு அவரது பங்கு பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும்.

மாற்றார் குழந்தைகள் மாற்றார் பெற்றோரிடமிருந்து பங்கு பெற முடியாது. இதே போல மாற்றார் பெற்றோர் மாற்றார் குழந்தைகளின் சொத்திலிருந்தும் பங்கு கேட்க முடியாது. வாரிசுகளே இல்லாத ஒருவர் தன் சொத்துக்களை யாருக்கும் உடைமையாக்காத நிலையில் இறந்து போய்விட்டால் அரசுக்கு (பைத்துமால்) சொந்தமாகிவிடும். பைத்துல்மால் இல்லாத இடத்தில் கணவன் இல்லாத மனைவி அல்லது மனைவி இல்லாத கணவன் பைத்துல்மாலுக்குச் சேர வேண்டியதைப் பெற உரிமை உண்டு என்று முஹம்மது அர்த் ஸவி சயீதாபானு (1878) எனும் வழக்கில் நீதிபதி கெம்ப் தீர்ப்பளித்தார்.

பங்குதாரர்களாகவோ (அஸ்ஹாபுல் ஃபராயின்) எச்சதாரர்களாகவோ (அஸபா) வரமுடியாத இரத்தத் தொடர்புடைய (துல் அர்ஹாம்) உறவினர்களே தூரத்து உறவினர்களில் வருகிறார்கள். பெரும்பாலும் பெண்தலைமுறையினரே இவ்வாறு வருவதைக் காணலாம்.

கருத்துகள் இல்லை: